(பஷீர் அலி)
முற்றத்தில் நிற்கும் நாவல் மர இலைகளை ஊடறுத்து நிலவொளி பளிச்சிடும். வாசலில் பரத்தியிருக்கும் குருத்து மணல் ஷபளார்| என்றிருக்கும். பக்கத்து வீட்டு ஆண்கள் பெண்கள் என முக்காடிட்டுக் குந்தியிருக்கும் இளமைக் காலத்து காட்சி கண்ணுக்குள் இருக்கிறது.
வேறnhன்றுமில்லை, செவ்வாய்க்கிழமை இரவு முஸ்லிம் நாடகம் கேட்பதற்கான மகாநாடுதான் இது. எங்கள் வாசலில் மட்டும் கூடும் மகாநாடல்ல அது அன்றைய யுத்த சூழலிலும் கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணும் காட்சி. தவிர, நாடுபூராகவும் உள்ள நேயர்களைக் கட்டிப் போட்டிருந்த பெருமை முஸ்லிம் சேவையின் நாடகத்துக்கு இருந்தது. புதன்கிழமை காலை தொட்டு இரண்டு, மூன்று நாட்களுக்கு அது எதிரொலிக்கும். பெரும்பாலும் பெண்களின் பலாய் அந்த நாடகத்தில் வந்த பாத்திரங்களாகத்தான் இருக்கும்.
சமூகத்தில் நடக்கின்ற நல்லது கெட்டதுகளுக்கு உதாரணங்களாக அந்த நாடகங்களே பேசப்படும். இப்படி, முஸ்லிம் சமூகத்தின் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஆகர்ஷித்திருந்த முஸ்லிம் வானொலி நாடகத்துக்கு, என்ன கண்ணூறு பட்டதோ சில காலமாய் அது ஒலிபரப்பப்படுவதில்லை. ஆனாலும் முஸ்லிம் நாடகத்தின் திடீர் மறைவு நேயர்கள் மத்தியில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது.
பின்னர் சின்னத்திரைகள் அடுப்படிகள் வரை புகுந்து விட்டதால் பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு சின்னத்திரைகளுக்கே வாழ்க்கைப்பட்டுப் போனது. வில்லிகளாக வந்து கணவன்மாரை அதட்டி, ஊரையே தன் சுண்டு விரலுக்குள் கட்டிவைக்கும் கதாபாத்திரங்களே நேயர்களின் ஷரோல் மொடலாகினர்.
500 அங்கங்களைக் கடந்து செல்லும் உப்புச் சப்பில்லா இந்த சின்னத்திரைகள் முஸ்லிம் பெண்களையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டன. இருந்தாலும் அன்று ஒலிபரப்பாகும் முஸ்லிம் நாடகங்கள் பற்றிய கதையை எடுத்துவிட்டாலே போதும் அது பற்றி ஆர்வத்துடன் பேசும் பலரைக் காணலாம். எனவே, வானொலி முஸ்லிம் நாடகத்தின் தேவை இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மீண்டும் புதிய நாடகங்கள் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியோடு, முஸ்லிம் நாடகத்தின் இன்றைய நிலையும் இடைவெளியின் தாக்கமும் புதிய தலைமுறையினருக்கு அதிலுள்ள பங்களிப்பும் குறித்து சற்று ஆராயலாம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் குறிப்பாக, தமிழ் நாட்டிலுள்ளோர் கூட கேட்கும் ஒரு நிகழ்ச்சிதான் முஸ்லிம் நாடகங்கள். வியப்பான விடயம் என்னவென்றால், முஸ்லிம் அல்லாதோரும் இதில் லயித்துப் போவதுதான். சினிமா ஆட்சி செய்யும் தமிழ் நாட்டிலேயே முஸ்லிம் சேவை நாடகங்களுக்கு மௌசு இருந்ததென்றால் அதன் தாக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்.
ஆயிரம் பேரைக் கூட்டிவைத்து நாள் முழுக்க பயான் செய்வதால் ஏற்படுத்த முடியுமான மாற்றத்தை, கலைத்துவத்துடன் அரை மணிநேர வானொலி நாடகத்தால் செய்ய முடியும். இதுவே நாடகம் எனும் ஊடகத்தின் தனித் தன்மைக்குப் போதுமான ஓர் எடுத்துக்காட்டாகும். வானொலி நாடகம் சமூகத்தில் சிறந்த கருத்து மாற்றத்தை செய்யும் என்பதை முஸ்லிம் சமூகம் காலம் தாழ்த்தியே கண்டு கொண்டது. ஆனால், இலங்கை தமிழ் சமூகம் இதனை 1925ஆம் ஆண்டளவிலேயே கண்டு கொண்டது. இருந்தாலும் 1940 களிலேயே தமிழ் நாடகத்தின் ஊடகப் பெறுமதி வலுப்பெற்றது எனலாம்.
1940களிலேயே முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. ஆனாலும் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் நாடகங்கள் தமிழ் நாடகங்களை விஞ்சிக் கொண்டு மேலெழுந்தன. முஸ்லிம் சேவையின் முதலாவது நாடகத் தயாரிப்பாளரான மர்ஹூம் எம்.எச். குத்தூஸ் மிகத் திறமையாகத் தனது பங்களிப்பை செய்தார். அவரின் நாடகத் தயாரிப்புத் திறமை சொற்ப காலத்திலேயே நேயர்களைக் கவர்ந்திருந்தது.
இவர் தயாரித்த நாடகங்களில் பீ.எச். அப்துல் 'மீட், ஏ.ஜவா'ர், ஏ.எஸ்.எம்.ஏ. ஜப்பார், கலைச் செல்வன், அமீனா பேகம், ஷெய் றஷீம் ஷாட், புர்கான் பீ போன்றோர் பாத்திரமேற்றுத் நடித்தனர். இவர்களின் குரல் வளமும் பாத்திரங்களை நகர்த்திச் செல்லும் பாங்கும் நேயர்கள் உள்ளங்களில் இவர்களைப் பதியச் செய்தது. பின்னர் தொண்ணூறுகளில் நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய எம். அஷ்ரஃப்கான் அவர்களின் திறமையான நிருவாகத்தின் கீழ் காத்திரமான பல நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன.
நாட்டை யுத்த மேகம் விழுங்கியிருந்த தொண்ணூறுகளில் மஃரிபுடன் கதவுகளை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பயங்கர நிலை வடக்கு, கிழக்கில் இருந்தது. ஆனாலும் செவ்வாய்க் கிழமை இரவுகளில் முஸ்லிம் நாடகம் கேட்பதற்காய் பக்கத்து வீடுகளில் உள்ளோர் எல்லாம் ஒன்றாகக் கூடி காத்திருக்கும் காட்சியை அங்குள்ள கிராமங்களில் காணலாம்.
இவ்வாறு தாக்கமிக்க ஊடகமான இந்த நாடகங்கள் மூடுவிழாக் கண்டன. ஏற்கனவே உள்ள தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் நாடகக் கலைஞர்களும் இளம் படைப்பாளிகளை அடையாளம் காணத் தவறியதன் விளைவே இதற்கு முதற் காரணம் என்று கூறலாம். தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதிலும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அவர்கள் காட்டிய கரிசனையை இன்னொரு தலைமுறைக்கு வழங்கத் தவறிவிட்டனர். கசப்பாக இருந்தாலும் இதுவே யதார்த்தமாகும்.
பின்னர், ஏற்கனவே ஒலிபரப்பாகி சேமித்து வைத்திருக்கின்ற பல நாடகங்கள் மீள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அந்த ஒவ்வொரு நாடகமும் கலைத்துவத்துடனும் ஆகர்ஷத்தன்மையுடனும் அவை காணப்பட்டதால் அதனை மீண்டும் புதிதாகக் கேட்கின்ற உணர்வை கொடுத்தன.
இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டு பொக்கிஷங்களாக வைக்கப்பட்டிருந்த பல நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து மாயமாகி இருக்கிறதாம். திட்டமிட்டோ கவனயீனமாகவோ பல நாடகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மூத்த கலைஞர்கள் சிலர் முணுமுணுத்துக் கொள்கின்றனர். நாடகம் ஏற்படுத்துகின்ற சமூகத் தாக்கத்தின் விளைவை அடையாளம் கண்டு கொண்ட முஸ்லிம் சேவை முஸ்லிம் நாடகத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ள செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது.
வானொலி நாடகத்தின் தேவை வலுவாக பேசப்படும் இத்தருணத்தில் இளைய தலைமுறை ஒன்றை இதற்குத் தயார்படுத்தும் தேவை உணரப்பட்டிருக்கிறது. இதனை உணர்ந்த இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றம் முஸ்லிம் சமாதான செயலகத்தின் அனுசரணையில் வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துகிறது. நாடுபூராகவுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறையில் சிறந்த நாடகங்களை எழுதுவதற்கான பூரண பயிற்சி வழங்கப்படுகிறது.
சமூகத்தின் ஆற்றல்களை சுமந்து வருகின்ற இந்த 26 இளம் கலைஞர்களையும் சமூகத்தின் குரலாக ஒலிக்கச் செய்ய அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பொறுப்பு நம்மீது உள்ளது. பயிற்றப்பட்ட அந்த இளம் தலைமுறையினரிடமிருந்து காத்திரமான வெளியீடுகளைப் பெற்று சமூகத்துக்கு வழங்க அவர்களுக்குத் தொடர் ஊக்குவிப்புகளும் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன.
சமூக சிந்தனையோடு செயற்படும் தலைவர்கள் தமது புதிய சிந்தனையாக இதனை உள்வாங்க வேண்டும். அவர்களுக்கான தொடர் பயிற்சிகளுக்கும் ஆளுமை விருத்திக்கும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் கலைசார் இருப்பு சார்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். சமூக ஆர்வலர்களே! வானலைகளில் தவழ்ந்துவரும் இவர்களின் சமூகப்பணி உங்கள் வியர்வைத் துளிகளாகவும் இருக்கட்டுமே.
நன்றி: எங்கள் தேசம்







0 comments:
Post a Comment